Thursday, December 4, 2008

பிஞ்சுமனசு: பாடல்கள்: புஷ்கின் ராஜ்குமார்


இளங்கோ பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எம்.இளங்கோவன் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படத்துக்கு பிஞ்சுமனசு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி டி.ஜெய்ராம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தர்ஷா நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, ஆர்த்தி, கணேஷ், பல்லவி, புவனா, மாஸ்டர் தருண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ஜெயச்சந்திரன், இசை இந்தியன், பாடல்கள் ஜெயராம், ஸ்ரீனிவாசன், புஷ்கின் ராஜ்குமார், இளங்கோவன், படத்தொகுப்பு முகம்மது இப்றாகிம், நடனம் கென்னடி, கலை வி.சீனிவாசன், தயாரிப்பு மேற்பார்வை குமார்.

சரவணன் தர்ஷா தம்பதிக்கு திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறக்கிறது. அதனால் அக்குழந்தை மீது உயிரையே வைத்து வளர்க்கின்றனர். தீடீரென ஒரு நாள் அவர்களின் குழந்தை காணாமல் போய்விடுகிறது.குழந்தையைக் காணாமல் துடித்துப் போகும் அத்தம்பதி, தங்களின் குழந்தையைத் தேடிக்கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சியும், அவர்களின் உணர்ச்சிகரமான கணங்களும்தான் பிஞ்சுமனசு படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27ம் தேதி தொடங்கி சென்னை , காஞ்சிபுரம் மற்றும் மகாபலிபுரம் போன்ற ஊர்களில் நடைபெறுகிறது.தயாரிப்பு எம்.இளங்கோவன்.

இலங்கை இராணுவத்தின் வெறி: தமிழர்களைக் கண்ணைக் கட்டி அடிப்பார்கள்



இலங்கை இராணுவத்தின் வெறி: தமிழர்களைக் கண்ணைக் கட்டி அடிப்பார்கள்
By: புஷ்கின் ராஜ்குமார்
Courtesy: குமுதம் - ஐப்பசி 29, 2008
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இலங்கைத் தமிழர்களை மட்டுமல்லாமல், தமிழக மீனவர்களையும் சுடுகிறது இலங்கை ராணுவம். பல மீனவர்களைப் பிடித்து சிறையில் அடைக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் சித்திரவதைகள் அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இராமேஸ்வரத்தில் சந்தித்துப் பேசினோம்.
பீட்டர், லோயலன், சுவீசன், ஆரோக்யம் ஆகியோருடன் திவாகர் என்ற பத்து வயதுச் சிறுவனும் சில மாதங்களுக்கு முன் கடலுக்குச் சென்றுள்ளனர். திடீரென அவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை ராணுவம் துப்பாக்கி முனையில் அவர்களைக் கைது செய்துள்ளது. சுமார் இரண்டு மாதம் சிறைவாசத்திற்குப்பிறகு அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் பீட்டர் நம்மிடம்
``நாங்க இந்திய எல்லையோரத்தில் படகுகளை நிறுத்தி வலைகளைப் போட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது மின்னல் வேகத்தில் வந்தது இலங்கை ராணுவப் படகு. அதிலிருந்த ராணுவத்தினர் திடீரென எங்களை நோக்கிச் சுட்டனர். நாங்கள் செய்வதறியாது கடலுக்குள் குதித்து நீந்தத் தொடங்கினோம். அப்போது எங்களைச் சுற்றி வளைத்து அவர்களின் படகில் ஏற்றிக்கொண்டு, எங்கள் அனைவரின் கண்கைளயும் கட்டிவிட்டனர். படகு கொஞ்சதூரம் போயிருக்கும், எங்களை ஒவ்வொருவராகத் தூக்கி கடலில் போட்டனர். அப்போதுதான் நாங்கள் கரைக்கு வந்திருப்பது புரிந்தது. அதாவது தலைமன்னார் பகுதியில் எங்களைத் தூக்கிப் போட்டிருப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அங்கே எங்கள் கைகால்களின் கட்டை அவிழ்த்துவிட்டனர். ஆனால் கண்கட்டை அவிழ்த்துவிடவில்லை. அந்த நிலையிலேயே ஐந்து நாட்கள் வைத்திருந்தனர். சாப்பாடு கொடுக்கும்போது கூட கண்களை அவிழ்த்துவிடவில்லை. பேசினால் கன்னத்தில் ஓங்கி அறைவார்கள்.
செவிப்பறை கிழிந்துவிடும்'' என்று சொல்லும் பீட்டருக்கு இப்போது ஒரு காது கேட்காது. அருகில் இருந்த லோயலன் ``எங்களை ஒவ்வொருவராக அழைத்துச் சென்று அடித்து நொறுக்குவார்கள். துப்பாக்கியைத் திருப்பி கட்டையால் இடித்ததில் என் உதடுகள் கிழிந்து பற்கள் ஆடிவிட்டன. ஐந்து நாட்கள் அடித்து நொறுக்கினார்கள். திவாகர் என்ற பத்து வயதுச் சிறுவனை எட்டி நெஞ்சுப் பகுதியில் உதைக்க, அவன் ரத்தம் கக்கினான். இது எதைப்பற்றியும் கொஞ்சமும் கவலைப்படாமல் அவர்களின் உயர்அதிகாரிகள் எங்களிடம் விடுதலைப்புலிகளைப் பற்றி விசாரித்தார்கள். எங்களுக்கு எந்தப் புலிகளையும் தெரியாது என்று கூறினோம். அதைவிட கொடுமை என்னவென்றால், எங்களுக்கு சிங்களம் தெரியாது என்பதற்காக எங்களை அடித்து விசாரிக்க சில தமிழர்களை நியமித்திருக்கிறார்கள். தமிழர்களை தமிழர்கள் மூலமே தண்டிக்கும் வித்தையைச் செய்து வருகிறது சிங்கள அரசு'' என்று கூறுகிறார்கள் இந்த மீனவர்கள்.
அடுத்து ஓலை குடாவைச் சேர்ந்த டேவிட் என்ற மீனவர் கடலில் மீன் பிடித்ததற்காக இலங்கைச் சிறையில் ஒரு வருடத்துக்கும் மேலாக இருந்து சித்திரவதைகளை அனுபவித்துள்ளார்.
``அந்தச் சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சிங்களர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு சட்டம். தமிழர்களுக்கு ஒரு சட்டம். அவர்களுக்கு வசதிகள் அதிகம். தமிழர்களுக்கு கொடுமைகள் அதிகம்.
சிறையில் அனைவருக்கும் ஒரே உணவுதான் என்றாலும் சிங்களக் கைதிகளுக்கு ருசியான சிறப்பு உணவு தரப்படும். தமிழர்களுக்கு நொந்துபோன சோறும் கெட்டுப்போன கீரையும்தான் சாப்பிடக் கொடுக்கின்றனர். அந்தக் கீரையில் புழுவும், பூச்சிகளும்தான் இருக்கும். அதுவும் இல்லையென்றால் பட்டினியால் சாகவேண்டியதுதான் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு அதைச் சாப்பிடுவோம். அந்த உணவைச் சாப்பிட்டு எனக்கு உடல் முழுக்க சிரங்கு ஏற்பட்டுவிட்டது. அதற்கு வைத்தியம் செய்யக்கூட வழியில்லை. அதேபோல் நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்ற விவரம்கூட தெரிவிக்கப்படாததால் எனது அப்பா சந்திராய்யப்பன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி இறந்தும் போய்விட்டார். ஒரு வருடம் கழித்து என்னை விடுதலை செய்து இலங்கையில் உள்ள அகதிகள் முகாமில் ஒரு மாதம் வைத்திருந்தனர்.
அதன்பிறகே இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். எனது படகு, வலைகள் மற்றும் எல்லாப் பொருட்களையும் திருப்பித் தரவில்லை. அதில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் நஷ்டம். அந்தக் கடனிலிருந்து எங்களால் இன்னும் மீளமுடியவில்லை. இலங்கைச் சிறையில் சித்திரவதை அனுபவித்த ஒரு வருட காலத்தை இப்போது நினைத்தாலும் தனிமையில் உட்கார்ந்து அழுவேன்.'' என்று கூறினார் டேவிட்.
இந்த அட்டூழியங்களைப் பார்த்துக்கொண்டு இந்திய அரசும் தமிழக அரசும் சும்மாவேயிருக்குமா? என்பதுதான் இன்று உலகத் தமிழர்களின் முக்கிய கேள்வி.

Pushkin rajkumar - Interview with Don ‘Vellai’ Ravi

Pushkin rajkumar - Interview with Don ‘Vellai’ Ravi
07.06.07
குமுதம் ரிப்போர்ட்டர்
வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?
தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.

‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி?

‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’


ராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா?

‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.
இந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து ஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’


ராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா?

‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’


நீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே?


‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.
நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’


இந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே?
‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’


போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா?


‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.
இந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’


நீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே?

‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’


எப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்?

‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’


நீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா?‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’


உங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு?

‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’
- புஷ்கின் ராஜ்குமார்